During the vote of confidence in the Tamil Nadu assembly Edappadi palanichami 122 MLAs voted in his favor
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்புக்கு முன்பு 122 எம்எல்ஏக்களும் கூவத்தூர் சொகுசு விடுதியில் குடித்து கும்மாளமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தந்த தொகுதி மக்கள் தங்களது எம்எல்ஏக்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
வாக்கெடுப்புக்குப் பின்னர் அதிமுக எம்எல்ஏக்களை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் துரத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் அரியலூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக அரசின் கொறடாவுமான தாமரை எஸ் ராஜேந்திரன், தொகுதிக்குட்பட்ட கீழ்பளுவூர், திருமானூர்,கோவிலூர்,ஏலாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றார்
கீழ்பளுவூரில் நடைபெற்ற விழவில் பங்கேற்று சைக்கிள் வழங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக வெளியே திரண்ட பொதுமக்கள் கறுப்புக் கொடியுடன் காத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராஜேந்திரனை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து ஏலாக்குறிச்சி சென்ற எம்எல்ஏவை வழி மறித்த பொது மக்கள் அவரை ஊருக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டிய பொது மக்கள் அவர் முன்பே அவரது உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்கும்முன் மக்கள் கருத்துக்களை கேட்காத எம்எல்ஏ எங்களுக்குத் தேவையில்லை என அவரை அங்கிருந்து துரத்தி அடித்தனர்.
இதனையடுத்து மற்ற ஊர்களுக்குச் செல்லமுடியாத எம்எல்ஏ ராஜேந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்
