தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது... உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்..!
பெகாசிஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்க கூடியது. சட்ட விரோதமானது. நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உளவு பார்க்கக்கூடியது பெகாசஸ்.
உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ், இந்து என்.ராம், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை என் புகார் அளிக்கவில்லை? 2019 முதல் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிவந்ததாக கூறப்படும்போது தற்போது அவசரமாக கையாளுவது ஏன்? தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகளின் தன்மையை ஆராய்ந்த பிறகே விசாரணைக்குள் செல்ல முடியும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பெகாசஸ் ஓட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்;- தொழில் நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. NSO நிறுவனம் உளவு பார்க்க கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசுகளுக்கு மட்டுமே வழங்கும். பெகாசிஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்க கூடியது. சட்ட விரோதமானது. நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உளவு பார்க்கக்கூடியது பெகாசஸ். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலரது செல்போன்கள் பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அதுகுறித்த விவரம் தற்போதுதான் வெளியாகியுள்ளது. அதனால்தான் இத்தனை நாட்களாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர் என கபில் சிபல் வாதிட்டார்.