அதிமுக பெண் எம்எல்ஏ அரசியலில் இருந்து திடீர் விலகல்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி...!
சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்காததையடுத்து பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் முன்னாள் நகரமன்ற தலைவரான பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து திடீரென விலகினர்.
சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்காததையடுத்து பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் முன்னாள் நகரமன்ற தலைவரான பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து திடீரென விலகினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித் தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏவான சொரத்தூர் ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்தப் பின்னணியில் அமைச்சர் சம்பத்தின் பங்கு இருப்பதாக தகவல் வௌியானது.
இந்நிலையில், குடும்பச்சூழல் காரணமாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வம், அவரது கணவர், முன்னாள் நகர மன்றத் தலைவரான பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வம் விலகலை அடுத்து, அவரது ஆதரவாளர்களான பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.