panneerselvam complaint to central minister about vijayabaskar
அதிமுக பொது செயலாளராக தினகரன் பொறுப்பேற்றதில் இருந்து, அவரது தளபதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதனால் முதலமைச்சர் உள்பட எந்த அமைச்சரையும் அவர் சீண்டுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை.
விஜயபாஸ்கர் ஒரு டாக்டர் என்பதால், ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சை குறித்த கேள்விகளுக்கு எல்லாம், அவரையே பதில் சொல்ல அனுமதித்தார் தினகரன்.

அத்துடன், ஆர்.கே.நகர் தொகுதியின் பணப்பட்டுவாடா மற்றும் கணக்கர் பொறுப்புக்களையம் அவரிடமே ஒப்படைத்தார் தினகரன். அவரும் தினகரனின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து வந்தார்.
இந்நிலையில், தினகரனின் பண பட்டுவாடா, தமது அணிக்கு வரவேண்டிய வாக்குகளை சிதறடித்துவிடும் என்று பன்னீர்செல்வம் பயந்தார்.
மேலும், பிரச்சாரத்தின்போது ஓ.பி.எஸ்ஸுக்கு நேரடியாக பதில் சொல்லும் வேலையையும் திறம்பட செய்து வந்தார் விஜயபாஸ்கர். அது விஜயபாஸ்கர் மீதான பன்னீரின் கோபம் மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டது.
இந்நிலையில் , பணப்பட்டுவாடா முழுவதும் விஜயபாஸ்கர் கையில் இருப்பதை அறிந்து வைத்திருந்த பன்னீர் தரப்பு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை மத்திய அமைச்சர் ஒருவரிடம் கொடுத்தது.

மேலும், தினகரன் வீட்டை ரைடு பண்ணுவதை விட, விஜயபாஸ்கர் வீட்டை ரைடு செய்தால் நல்லது என்றும் அப்போது பன்னீர் தரப்பு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கூறி இருந்தது.
இதை எப்படியோ அறிந்து அப்செட் ஆன விஜயபாஸ்கர், அன்று மதியமே, உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு வந்து விட்டார். உண்மையில் உடம்புக்கு ஒன்றும் இல்லை மனதுதான் சரியில்லை.

பன்னீர் தரப்பினர் கொடுத்த ஐடியாவின் அடிப்படையிலேயே விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரது வீட்டிலும் நேற்று ரைடு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை அறிந்து, தினகரன் தரப்பு மிகவும் கொதித்து போயுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
