கனமழை எதிரொலி.. களத்தில் இறங்கிய முதல்வர் பழனிசாமி..! ஆர்.கே.நகரில் ஆய்வு.. அடுத்தது முடிச்சூர்..!
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தங்கவைப்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை முழுவதும் 15 மண்டலங்களில் மழை வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை 30 அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மழையால் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார். அங்கு வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்டார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோரும் சென்றனர். முதலமைச்சர் ஆய்வின்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனும் உடனிருந்தார். பின்னர் தண்டையார் பேட்டை செல்லியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரிடையாக குறைகளை கேட்டார்.
அதன்பின்னர், ஆர்.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து முடிச்சூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார்.