உங்களோட பேசி என்ன ஆகப்போகுது..? என் ரூட்டே வெற.. திமுகவின் மூக்கை உடைத்த முதல்வர் பழனிசாமி
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் அண்மையில் இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்தது. 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகம் சார்பில் முறையான வாதங்கள் முன்வைக்கப்படாடதது தான் இதற்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் ஆளும் தரப்பில் ஸ்டாலினின் வலியுறுத்தலை பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், வரும் 23ம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜகவிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காவிரி இறுதி தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்திற்கான தண்ணீரை குறைத்த உச்சநீதிமன்றம், தனது இறுதி தீர்ப்பில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் எனவும் அதுவரை எந்த மேல்முறையீடும் செய்ய முடியாது என தெரிவித்துவிட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டவுள்ள நிலையில், கட்சிகளின் ஆலோசனைகளைவிட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும் என கணக்கு போட்டாரா முதல்வர்? அல்லது திமுகவின் அனைத்து கட்சி கூட்ட முயற்சியை மூக்குடைக்கும் நோக்கில் ஆலோசனையா? எது எப்படியோ ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சரிதான் என்பதே மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.