இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்-காலிஸ்தான் தீவிரவாதிகள். டுவிட்டரில் யுத்தம், 1178 கணக்குகளை முடக்க கோரிக்கை.
இதை மெய்ப்பிக்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் காலிஸ்தான் போராட்டம் வெல்லும் எனவும், பாகிஸ்தான் மக்களின் ஆதரவு காலிஸ்தானுக்கு உண்டு எனவும் பேசி வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அதுகுறித்து வதந்திகளை பரப்பும் வகையிலும் டுவிட் செய்து வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகளை நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சுமார் 1178 பேரின் ட்விட்டர் கணக்குகளின் பட்டியலும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாதத்துக்கு மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பல்வேறு வெளிநாட்டை சேர்ந்த பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதை வன்மையாக கண்டித்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், இது திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் செய்யும் சதி எனவும், விவசாயிகளின் போர்வையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளனர். எனவும், அதன் எதிரொலி தான் இந்த விவசாயிகள் போராட்டம் எனவும் இந்திய உள்துறை எச்சரித்துள்ளது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் காலிஸ்தான் போராட்டம் வெல்லும் எனவும், பாகிஸ்தான் மக்களின் ஆதரவு காலிஸ்தானுக்கு உண்டு எனவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தியும் கருத்துக்கள் பதிவிடப்பட்ட வருகின்றன. இக்கருத்துக்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் விவரத்தை கணக்கெடுத்துள்ள, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ள 1178 பேரின் ட்விட்டர் கணக்குகளை பட்டியலாக தயாரித்து அதை ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும், வெளிநாடுகளில் இருந்து செயல்படும், இவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் எனவும், அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற கருத்துக்கள் இந்தியாவின் சமூகம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பதிவிடப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைகள் அனைத்தும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பல வதந்திகள் பரப்பும் வகையில் உள்ளது எனவும், இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அதில் வலியுறுத்தியது, அதேபோல இதற்கு முன் 250 கணக்குகளை முடக்கும் படி இந்தியா வலியுறுத்தியது, அதன்படி பதிவுகளை முடக்கிய அந்நிறுவனம் பின்னர் அது கருத்து சுதந்திரம் என கூறி மீண்டும் அந்த கணக்குகள் செயல்பட அனுமதித்துள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட டுவிட்டர்களை, டுவிட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி வரவேற்று லைக் செய்துள்ளார். இது கூடதாலக இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் 1178 பேரின் கணக்குகளை முடக்குமாறு இந்தியா வலியுறுத்திய நிலையில், டுவட்டர் நிறுவனம் அதை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் நடுநிலை தன்மை மீது இந்தியாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.