படையப்பா எழுந்து வா... பாட்ஷா போல் நடந்து வா.. விரைந்து உடல்நலம் பெற ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து.!
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
படையப்பா எழுந்து வா.. பாட்ஷா போல் நடந்து வா என்று நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அடைப்பு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். மேலும் ரஜினி உடல் நலம் தேறி வருகிறார். அவருடைய குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பிரச்சனைகளை சரி செய்யவும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நலம் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். இதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினி உடல் நலம் பெற தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் ரஜினிகாந்த் நலம்பெற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்திவருகிறார்கள். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினி உடல்நலம் பெற ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன்.” என்று ட்விட்டர் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.