அம்மா ஆட்சியா இருந்தா... மானநஷ்ட வழக்கு போட்டிருப்போம்! குருமூர்த்தியை எச்சரிக்கும் ஓ.எஸ்.மணியன்!
முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஆண்மையற்றவர்கள் என்று ஆடிட்டர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய விவகாரத்தில், ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்று நடந்திருந்தால் மானநஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கும் என்று அமைச்சர் ஓ.எஸ்மணியன் ஆவேசமாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
குருமூர்த்தியின் இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. எந்த முகத்தைக் கொண்டு அவர் பேசுகிறார். ஒரு ஆடிட்டராக இருப்பவர், பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்பவர் இப்படிப்பட்ட வார்த்தையைக்
கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அவர்கள் வேண்டுமானால் ஆண்மை இல்லாமல் இருக்கலாம். அம்மா வழியில் வந்தவர்கள் அனைவரும் ஆண்மை வீரியத்தோடு அதிமுகவை கட்டிக் காத்து கொண்டிருக்கின்றனர்.
இவர் என்ன கிங் மேக்கரா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், எதுவுமே ஒரு அளவுக்குத்தான். அதிமுக கொதித்தெழுந்தல் என்ன நடக்கும் என்பதை அவர் புரிந்து பேச வேண்டும் என்றார். நாவடக்கம் வேண்டும். தடித்த மோசமான வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அதற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும். படிக்காத ஒருவர் கூட பண்பாளராக நடக்கிறார். ஆனால் படித்த ஒரு முட்டாளாக இருப்பதுதான்
வேதனையாக உள்ளது. நடக்க ஆண்மை இல்லாதவன்தான் அதைப்பற்றி பேசுவான் என்று ஜெயக்குமார் காட்டமாக கூறியிருந்தார்.
நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறியதற்கு ஏற்றவனாவேன் என்று குருமூர்த்தி டுவிட்டரில் பதிலளித்திருந்தார். நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தேன். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் டுவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இந்த விவகாரம் குறித்து கூறும்போது, ஆடிட்டர் குருமூர்த்தி விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொறுமை காத்து வருகிறார் என்றார். ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற விஷயம் நடந்திருந்தால் மானநஷ்ட வழக்கு போடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆவேசமாக கூறியுள்ளார்.