திவாகரனுடன் கைகோர்த்த 3 அமைச்சர்கள் !!! - கலங்கி போயுள்ள எடப்பாடி...
சசிகலா - ஒ.பி.எஸ் அணிகள் போய் தினகரன் அணி, திவாகரன் அணி, டாக்டர் வெங்கடேஷ் அணி, விவேக் அணி என அணிகளுக்கு பஞ்சம் இல்லாமல் மாறி போய் உள்ளது அதிமுக.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இந்த அணி, அந்த அணி என பேச்சுக்கு கூட இல்லாமல் ராணுவ தலைமை தளபதி போல ஒரே குடையின் கீழ் தனது சுட்டு விரல் அசைவிற்கு அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
சசிகலாவை தொடர்ந்து தினகரனும் சிறைக்கு சென்று விட்டதால் மன்னார்குடி குடும்பத்தையே ஒதுக்கி வைத்து விட்டோம் என தொடர் பேட்டி அளித்து வந்தனர் எடப்பாடி கோஷ்டியினர்.
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டதால் தங்களோடு கைக்கோர்க்குமாறு ஒ.பி.எஸ்க்கும் அழைப்பு விடுத்தனர். ஆனால் 6 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இன்னமும் திவாகரன், தினகரன் கட்டுப்பாட்டில் இருப்பதால் உஷாராகி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் ஒ.பி.எஸ் அணியினர்.
எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையிலும் அவரது பதவியை பிடுங்கும் வகையிலும் தினகரன் மற்றும் திவாகரன் செயல்பாடுகள் இருந்ததால் மொத்தமாக ஆடிப்போய் இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த களேபர சூழ்நிலையை வசமாக பயன்படுத்தி கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
சத்தமின்றி, செய்கூலி சேதாரமின்றி, ஒ.பி.எஸ் தரப்பு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவுமின்றி அரசு கவிழாமல் இருப்பதற்கான உள் வேலைகளையும் செய்துவிட்டிருந்தார் எடப்பாடி.
தினகரன் ஆதரவு அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், மற்றும் திவாகரன் ஆதரவு அமைச்சர்களான ஒ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு, ஆகியோரையும் டாக்டர் வெங்கடேஷ் ஆதரவாளர்களான ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், ஆகியோரையும், செய்யவேண்டியதை செய்து கனகட்சிதமாக தனது வழிக்கு கொண்டு வந்திருந்தார் எடப்பாடி.
இந்த நிலையில், இன்று சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த மகாதேவனின், உருவப்பட திறப்பு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சசிகலாவின் தம்பி திவாகரன், கணவர் நடராஜன், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இவர்களோடு திவாகரன் ஆதரவு அமைச்சர்களான ஒ.எஸ் மணியன், காமராஜ், துரைக்கண்ணு, ஆகியோரும் கலந்து கொண்டு சாவகாசமாக பேசி கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தினகனுக்கு பிறகு சசிகலா குடும்பத்தினரின் கை தளர்ந்து விட்டது என நிம்மதி அடைந்திருந்த எடப்பாடிக்கு அமைச்சர்கள் மூன்று பேர் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒ.பி.எஸ்சின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சியை முழுமையாக நடத்துவேன் என நேற்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்திருந்தார். சசிகலா குடும்பத்து முக்கிய உறுப்பினரான திவாகரனுடன் அமைச்சர்கள் மீண்டும் கைகோர்த்து இருப்பதால் நிச்சயம் தம்மை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள் என கலங்கி போயுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.
எத்தனை வழக்குகள் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கடைசி வரை பார்த்துவிடலாம் என்ற ரீதியில் தான் சசிகலா குடும்பத்து உறவுகளும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதைத்தான் இது காட்டுகிறது.