ஓ பன்னீர்செல்வம் ,தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்,வரும் காலங்களில் அதிமுக அமமுக ஒருங்கிணைந்து செயல்பட போகிறது ஆகவே அமமுக வினருடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளதாக  ஓபிஎஸ் அணி ஆதரவு மாவட்ட செயலாளர் சையதுகான் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ்யை கழட்டிவிட்ட இபிஎஸ் அதிமுகவை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ்- டிடிவி தினகரன்- சசிகலா ஆகிய மூன்று பேரும் ஒன்றினைவார்கள் என கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேனியில் நடைபெற்ற போராட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் டிடிவி தினகரன் அணியோடு இணைந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்தும், செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்திய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரை கண்டித்தும், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக மற்றும் அமமுகவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிடிவி அணியோடு இணைந்து போராட்டம்

ஓபிஎஸ் அணி ஆதரவு மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அமமுகவினர் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர். குடிநீர் பஞ்சத்தை போக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவரை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சையது கான் அமமுக மற்றும் அதிமுக வரும் காலங்களில் இணைந்து செயல்படுவதற்கு முன்னோட்டம் தான் இரு அணிகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியது என தெரிவித்தார்.

விரைவில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்

இந்தப் போராட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஒப்புதல் அளித்து உள்ளார்கள் என்றும்,இந்தப் போராட்டம் இணைந்து நடத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே கூட்டணிக்கு அட்சரமாக நாங்கள் கருதுவதாகவும், அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் எனவும் கூறினார். ஜெயலலிதா காலத்தில் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்த தினகரன், ஓபிஎஸ், சசிகலா, ஆகிய மூன்று பேரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என சைய்யது கான் தெரிவித்தார். முன்னதாக அ ம மு க வினரை சேர்த்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷமிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் வேலு என்ற நபர் சரமாரியாக தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!