ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அ.தி.மு.க பொதுசெயலாளராகவும், ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
பின்னர், ஆட்சியையும் கட்சியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என கூறி சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக நியமித்தனர். இதைதொடர்ந்து சசிகலாவுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் 2 நாட்கள் கழித்து திடீர் என்று ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தீப்பொறியை எழுந்தார்.
சசிகலாவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
இதனால் எடப்பாடி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். சசிகலா சிறைக்கு செல்லும் முன் எந்த சூழ்நிலையிலும் கட்சி பிளவுக்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது என்றும் பன்னீர்செல்வத்தை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்து சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து எடப்பாடி முதல்வராக தேர்வு செய்யபட்டார். அவருக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அதற்கான சிறப்பு சட்டசபை நேற்று கூடியது. அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ்க்கு 11 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறி எடப்பாடி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.எல். ஏக்களை மீண்டும் அ.தி.மு. கவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க ஒற்றுமையுடன் ஒரு அணியாக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அவர்கள் வாக்கெடுப்புக்கு முன்பு இரு அணியினருடன் பேச்சு நடத்தினர். ஆனால் பலன் இல்லை. தற்போது வாக்கெடுப்பு முடிந்த நிலையில் மீண்டும் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்களையும் மூத்த நிர்வாகிகளையும் மீண்டும் இழுக்கவும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஓ. பன்னீர் செல்வம் தவிர மற்ற எம்.எல்.ஏக்களை ஒன்று சேர்க்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
