ஓ.பி.எஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கக்கூடாது... சி.வி.சண்முகத்தை ஏவிவிட்ட எடப்பாடி பழனிசாமி..!
ஓ.பி.எஸ் மகன் லிஸ்டில் இடம்பெற்று இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடாது என்கிற காரணத்துக்காகவே எடப்பாடி பழனிசாமியே, சி.வி.சண்முகத்தை இப்படி பேச வைத்து ஆழம் பார்க்கிறார் எனக் கூறுகிறார்கள்
பாஜக கூட்டணி குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. யார் சொல்லி அவர் இப்படி பேசினார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலை குறிவைத்து திமுக தயாராகி கொண்டிரு கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக. ஆனால், பாஜகவை நம்பி உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்க அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. முன்பு நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவை தள்ளி வைத்தே அதிமுக களமிறங்கியது. அதில் ஓரளவு அதிமுகவுக்கு பலனும் கிடைத்தது என்பதே உண்மை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எப்போது பேட்டி அளித்தாலும் அதிரடி கிளம்பும். இப்போது பாஜக குறித்து அவர் பேசியிருப்பது பிரளயத்தைக் கிளப்பி இருக்கிறது. பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம். அதுவே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார். பாஜகவை குறிவைத்து அவர் பேசியுள்ளதால், இது கூட்டணி முறிவுக்கான ஆரம்பமா என்ற சந்தேகம் எழுகிறது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான ஆதரவாளர். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமோபாஜகவின் ஆதரவாளர். அவர் தன் மகனான எம்.பி., ரவீந்திரநாத்துக்காக மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டிக் கொள்ள முனைகிறார். நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்கிற பேச்சு அடிபடுகிறது.
இதனையொட்டியே சி.வி.சண்முகம் பாஜகவை விமர்சித்துள்ளார் என்பது புலனாகிறது. ஓ.பி.எஸ் மகன் லிஸ்டில் இடம்பெற்று இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடாது என்கிற காரணத்துக்காகவே எடப்பாடி பழனிசாமியே, சி.வி.சண்முகத்தை இப்படி பேச வைத்து ஆழம் பார்க்கிறார் எனக் கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.