ops says that they wont be the reason for rule dissolution

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எங்களால் கலையாது என்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி வருகிறார். திண்டுக்கல்லில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ். முடிந்து சென்னை திரும்பினார்.

அப்போது, மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.

 ‘2 மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கலையும் என மதுசூதனன் தெரிவித்துள்ளார். எங்களால் எந்த காரணத்தாலும், இந்த ஆட்சி கலையாது.

அவர்களுக்கு உள்ளேயோ போட்டி உருவாகி பிரிந்தாலும், ஆட்சி கலைந்தாலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

இரு அணிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவது, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் சில எம்எல்ஏக்களுக்கு கலக்கம் ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைப்படித்தான் நாங்கள் நடந்து வருகிறோம். இதனால்தான் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எங்களை பிடித்துள்ளது.

கடந்த 6 ஆண்டு ஆட்சியில் அடித்தட்டு மக்கள், மேல்மட்ட மக்களுக்கு இணையாக இருக்க வேண்டுமென்று, அரசின் மொத்த வருவாயில் 48 சதவீதம் சமூக நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி நடத்தும் அரசு, அந்த கொள்கையை பின்பற்றவில்லை.