நீட் தேர்வு தேதி அறிவிச்சாச்சு..! எப்ப தான் நீட் தேர்வை ரத்து செய்ய போறீங்க..! ஸ்டாலினை வம்பிழுக்கும் ஓபிஎஸ்..
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய திமுக அரசு,வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து?
நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் 2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது. ஆனால், இதை தி.மு.க. செய்யவில்லை. இதன்
காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் ஏழை, எளிய கிராம மக்கள் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக, 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அதனை ரத்து செய்கின்ற ரகசியம் தி.மு.க.விற்கு தெரியும் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை நீட் தேர்வு ரத்து குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது செய்யாத தி.மு.க., இப்போது அதை ரத்து செய்யப் போவதாக கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைந்துள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கி உள்ளதாக கூறியுள்ளார்.
நீட் தேர்விற்கு விடியல் கிடைக்கவில்லை
"தி.மு.க. ஆட்சி அமையும்போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். நீட் - தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். விடியல் பிறக்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு முன் அறிக்கை விடுத்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்தச் செய்தி 12-9-2020 நாளிட்ட பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. அதில், "கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 11 மாதங்கள் உருண்டோடி விட்டன. ஒரு கல்வியாண்டும் கடந்து விட்டது. இரண்டாவது கல்வியாண்டு ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால் இன்னும் விடியல் பிறக்கவில்லை. நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-09-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமுன்வடிவின் நிலைப்பாடு குறித்து அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்காத நிலையில், 01-02-2022 அன்று நீட் தேர்வு ரத்து சட்டமுன்வடிவு மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் நீட் தேர்வு
இதனையடுத்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் 08-02-2022 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு ரத்து சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு. ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. மாண்புமிகு முதலமைச்சரும் மாண்புமிகு பாரதப் பிரதமரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இருப்பினும், நீட் தேர்வு குறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் பேசப்பட்டது குறித்தோ, அதற்கு அவர் அளித்த பதில் குறித்தோ மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், அடுத்த கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடக்க இருப்பதாகவும், அதற்கான இணையதளப் பதிவு நாளை முதல் துவங்க இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.