அதிமுக தொண்டர்களே ரெடியா இருங்க….இன்று முதல் உங்கள் ஊருக்கு வருகிறார் ஓபிஎஸ் …பராக்..பராக்…
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து பேச சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து ஓபிஎஸ் இன்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அப்போது அணியை பலப்படுத்துவதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக, சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் என இரண்டாக பிரிந்து செயல்படத் தொடங்கியது. அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தணிடனை உறுதி செய்யப்பட்டு சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக துணைப்பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சி , இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான ஒரு அணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணைந்து ,தேர்தல் கமிஷனில் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முடிவு செய்தன.
இதையடுத்து இரு அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். ஆனால் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து பேச்சு வார்த்தை நடைபெறவில்லை, அதே நேரத்தில்தற்போது இரு அணியினரும் பேச்சுவார்த்தையை விலக்கிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவின் படத்தை வைத்து தொண்டர்களை ஈர்க்கின்றனர்.
மேலும், தங்கள் வசம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் இருக்கின்றார்கள் என்றும் கூறி வருகின்றனர். மற்றொரு புறம் ஓபிஎஸ் புதிய யுக்தியை கையாள உள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது அதனுடன் சேர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து பேச சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். முதல் கட்டமாக காஞ்சிபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்.
அப்போது ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும், இரு அணிகள் இணைவது தொடர்பாக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் கருத்து கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தங்களது அணியை பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
இதோ புதிய பயணத்தை தொடங்கவுள்ளார் ஓபிஎஸ்…