ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஒசாமா பின்லேடன் வைத்திருந்தவர் யார் என்று விசாரணை நடைபெற்று வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி பேசினார்.

அப்போது அவர் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்தப் போராட்டத்தில் சிலர் ஒசாமா பின்லேடன் படத்தை வைத்திருந்ததாக முதல்வர் தெரிவித்திருந்தார். 

அந்தப் படத்தை நானும் பார்த்தேன். அது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வைத்திருந்த படம் போல் இல்லை. சாலையில் செல்பவர்கள் வைத்திருந்த படமாகத் தெரிகிறது. பின்லேடனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரும் இங்கு இல்லை. முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறையுடன் செயல்பட்டு வரும் அரசு இது என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஓபிஎஸ் எந்தச் சமுதாயத்தையும், மதத்தையும் நான் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று தெரிவித்தார்.

எந்த மதத்தையும் நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னீர்கள் என்று நானும் சொல்லவில்லை என்று தமீமுன் அன்சாரி தெரிவித்தார்..

பின்லேடன் படத்தை வைத்திருந்தவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு யார் என்பது தெரிய வரும். என்று தெரிவித்தார்.