தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை ஈபிஎஸ் தரப்புக்கு வழங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை ஈபிஎஸ் தரப்புக்கு வழங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஏற்கனவே ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தற்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக இரு தரப்பும் மோதி வருகிறது. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை தங்கள் தரப்புக்கு தரக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர். இதனிடையே தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து செல்லும் அதிகாரத்தை தங்கள் தரப்பில் வழங்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்த பின்னர் அதிக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவியுங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தற்போது இடைக்கால கழக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். மேலும் அதிமுக தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அதில் கழகத்தின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அனைத்து வங்கி கணக்குகளிலும் தற்போது வரவு செலவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. அதனை பேங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு தங்களுக்கு அனுமதி கோரி வங்கி கிளையில் மனு செய்திருந்தோம். வங்கி மறுத்துவிட்டது. எனவே அதிமுக தரப்பில் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையும் படிங்க: தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சி... யமஹா நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் செல்ல பாண்டியன் மற்றும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுப்புரத்தினம் ஆஜராகி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்க கவசம் கொடுக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்கள் தரப்பையும் இந்த வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனால் தரப்பில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்கின்றதோ அதை பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வங்கி தரப்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணை வருகின்ற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
