பிரதமருடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கே.பி. முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், நாளை பதவியேற்க உள்ளார். இதையடுத்து, புதிய குடியரசு தலைவர் பதவியேற்பாட்டுகள் நடந்து வருகின்றன.
பதவியேற்பு விழாவில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் இன்று டெல்லி புறப்பட்டுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார். அவருடன் எம்.பி. மைத்ரயன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கே.பி. முனுசாமி ஆகியோர் சென்றனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக அணிகள் இணைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அவர்களி இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.