ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை தடியடி நிகழ்ந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து முதல்வர் ஓபிஎஸ், டிஜிபி ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக 6 நாட்களாக போராடிய மாணவர்கள் அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து அரசின் கோரிக்கையை ஏற்று கலைந்து சென்றனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் கலைய மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

அவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் வன்முறை வெடித்தது.

போலீசார் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். ஐஸ் ஹவுஸ் ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினார்.

சட்டசபையிலும் நேற்று இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அப்போது பதிலளித்து பேசிய முதல்வர் ஓபிஎஸ் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 23ஆம் தேதி நடந்த வன்முறை, அதையொட்டி நடந்த பிரச்சனைகள் குறித்து டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் இருவருடனும் முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரிடம் போராட்டம் நடந்த விதம் வன்முறை எவ்வாறு தூண்டப்பட்டது, போலீசார் காயப்பட்டது, பொதுசொத்துக்கள் சேதப்பட்டது உள்ளிட்ட பலவேறு விஷயங்களை இருவரும் எடுத்துரைத்தனர்.