மகனின் வெற்றிக்காக காசியில் பிரார்த்தனை ! பயபக்தியுடன் ஓபிஎஸ் !!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் 4 தொகுதி இடைத் தேர்தல் குறித்து தீவிர பணியில் இருக்கும்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகனின் வெற்றிக்காக காசிக்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பய பக்தியுடன் பிரார்த்தனை செய்யும் படம் வெளியாகியுள்ளது.
துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திநாத்குமார் மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். கடுமையான போட்டி அந்த தொகுதியில் நிலவியதால் அங்கு அவர் வெற்றி பெறுவாரா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் மகனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இதனால் ஓபிஎஸ் மகனுக்கு இவர்கள் இருவரும் செம டஃப் கொடுத்தனர்.
அதே நேரத்தில் ரவீந்திரநாத்குமார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக குற்றச்சாட்டும் எழுந்தது. உசிலம்பட்டி பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை என்பதால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்து வருவதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து ஓபிஎஸ் மகன் ஜெயிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக காசி சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.
ஆனால் கடந்த சில நாட்களாக மோடிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இமேஜை உடைக்கவும், மோடிக்கும் தனக்கும் இடையே நல்ல நெருக்கம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ளவும் தான் ஓபிஎஸ் காசி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே மாதம் 19- ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
மோடி மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகாத்தான் அவர் வட மாநிலங்களுக்குச் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துள்ளார்.