Asianet News TamilAsianet News Tamil

தமிழக பட்ஜெட் நம்பிக்கைத் துரோகத்தின் ஒட்டுமொத்த உருவம்..! திமுக அரசை விளாசும் ஓபிஎஸ்

தீபாவளித் தினத்தன்று பட்டாசுகளை கொளுத்தும்போது வானத்தில் காணப்படும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்தவுடன் அனைவருக்கும் வியப்பும், பிரமிப்பும் ஏற்படும். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடும். இதுபோன்று, தமிழக பட்ஜெட் வெறும் கண்ணுக்கு விருந்தாக காட்சி அளிப்பதாக  அமைந்துள்ளதே தவிர, மக்கள் மனம் குளிரும்படியாக அமையவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 

OPS has said that the Tamil Nadu budget is an overall image of betrayal of trust
Author
First Published Mar 21, 2023, 8:16 AM IST

தமிழக பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசால் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை. மூன்றாவது நிதிநிலை அறிக்கையிலாவது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் திட்டங்கள் இருக்காதா என்று எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு, விடிவுகாலம் பிறக்குமா என்று காத்திருந்த ஏழையெளிய மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.நிதிநிலை அறிக்கை பக்கம் 5-ல், கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய 2019-2020 ஆம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டால் ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை குறைந்திருக்கிறது. என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம், கொரோனா பெருந்தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் வருவாயில் ஏற்பட்ட உயர்வு, 

மின் பேருந்துகள் என்ன ஆச்சு.?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 6 மாத காலம் தாமதப்படுத்தியதில் ஏற்பட்ட மிச்சம், காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாததால் ஏற்பட்ட செலவுக் குறைப்பு ஆகியவைதான் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சென்ற ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 2,213 BS VI புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 2,713 பேருந்துகள் கொள்முதல் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படாதது அந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

மாதம் ஒரு முறை மின் கட்டணம்

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உயர்த்துதல் ஆகியவை குறித்து நிதி ஒதுக்கப்படாதது போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2021-22 ஆம் ஆண்டில் இருந்த 11,955 கோடி ரூபாயிலிருந்து நடப்பாண்டில் 7,825 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வுதான். மின் கட்டண உயர்வினால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்' குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது பொதுமக்களை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மகளிர் உரிமை தொகை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடாதது அவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாகவும், நடப்பாண்டில் மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கான அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

பயனாளிகள் எண்ணிக்கை குறைப்பு

அதே சமயத்தில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்றும், இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியின்படி 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

நம்பிக்கை துரோகம்

பொதுமக்கள் நம்பியிருந்த முக்கியமான அறிவிப்புகளான கல்விக் கடன் ரத்து, நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம், எரிவாயு மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு, மாதம் ஒரு முறை மின் கட்டணம், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது? அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios