எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் - மாநிலம் முழுவதும் 36 இடங்களில் அறப்போராட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு காலமானார்.
இதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்படுகின்றனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்ற்ம் சாட்டினர்.
இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனக்கும் இதில் சந்தேகம் உள்ளதாக கருத்து தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைவுக்கு தமிழக அரசு, அப்பல்லோ மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது, ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக கூறினார்.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முரண்பாடான அறிக்கையால், பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவில் நீதி விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடன் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதுகுறித்து மதுசூதனன் கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. அதை தெளிவுப்படுத்த நீதி விசாரணை வேண்டும். ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.
இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தனிப்பட்ட நபராக இல்லாமல், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இன்று உண்ணாவிரதம் தொடங்குகிறோம் என்றார்.
இதேபோல், ஆவடி பகுதியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஒ.பி.எஸ். அணியை சேர்ந்த அதிமுகவினர், மாநிலம் முழுவதும் 36 இடங்களில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.