ஓபிஎஸ். இபிஎஸ் துரோகிகள்.. முதுகில் குத்திவிட்டனர்.. என்னை தோற்க வைத்தனர். கொதிக்கும் ஜான் பாண்டியன்.
நான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட்டால் தமிழக முன்னேற்றக் கழகம் முன்னேறி விடும், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் முன்னேறி விடும் என்பதனால் அவர்கள் எனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்தார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், நான் தோற்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்க வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது அரசியல் தளத்தில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மக்களின் அரசியலை முன்னெடுத்து வருகிறார் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன். பட்டியல் வெளியேற்றம் என்பது அவரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளர், குடும்பர், காலாடி, வாதிரையான் உள்ளிட்ட சமூகத்தினரை இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழர் முன்னேற்ற கழகம் தேர்தலை சந்தித்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி எனதென் மாவட்டங்களில் வாக்கு வங்கி வைத்துள்ள ஜான் பாண்டியன் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதில் அவர் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதிமுக தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அதிமுக-பாஜக கூட்டணியை நம்பி தேர்தலில் போட்டியிட்ட தனக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை, நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் திட்டமிட்டு எனக்கு எழும்பூர் தொகுதியை வழங்கினார். நானும் அப்போதைய சூழ்நிலையில் அதில் போட்டியிட்டோன். எனக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்களில் தொகுதிகளை கேட்டேன் முதலில் எனக்கு வழக்குவதாக கூறி கடைசிவரை தரவேயில்லை. நான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட்டால் தமிழக முன்னேற்றக் கழகம் முன்னேறி விடும், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் முன்னேறி விடும் என்பதனால் அவர்கள் எனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்தார்கள்.
கூட்டணி தர்மத்தை காக்க அதிமுகவினருக்கு நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது தொகுதியில் எனக்கு எதிராகவே அவர்கள் வேலை செய்தனர், எனக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமனை வெற்றி பெற வைப்பதில் அதிமுக முனைப்பு காட்டியது. குறிப்பாக எழுப்பூர் தொகுதிக்கான மாவட்ட செயலாளர் பாலகங்கா, அந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன் என்பதை தெரிந்தவுடன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அதிமுக தலைமைக்கு நான் பலமுறை புகார் கொடுத்தேன், ஆனால் இதுவரை எவர் மீதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் இல்லை, அத்றகு வலிமையான தலையை அங்கு இல்லை என்பதைதான் காட்டுகிறது. கூட்டணியில் விசுவாசமாக நடந்து கொண்ட என்னை அதிமுக முதுகில் குத்தி விட்டது என தனது வேதனையை அவர் பதிவு செய்துள்ளார்.