ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்.. அடிதடி, கல்வீச்சு..! புதுக்கோட்டையில் பரபரப்பு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது புதுக்கோட்டையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் பதவிக்கு போட்டியிட முதல்வர் பழனிசாமி ஆதரவாளரும் புதுக்கோட்டை நகர அதிமுக செயலாளருமான பாஸ்கர், வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, அங்கு பாஸ்கரின் ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்துள்ளனர். அவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்காமல், பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்துள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றி கைகலப்பில் முடிந்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.