ஓ.பி.எஸ் இடம்பெயர்ந்தார்... சசிகலாவுக்கு இடமே இல்லை... அசராத எடப்பாடி..!
ஓ.பி.எஸ் பங்குபெறாததற்கு காரணம், அவர் சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் அவரால் ஆலோசனையில் பங்கேற்க முடியவில்லை.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. நல்ல நாள் என்பதால், சென்னையில் இன்று அவர் புதிய வீட்டில் குடியேறுகிறார். இதற்காக கிரக பிரவேச நிகழ்ச்சி நடப்பதால், அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நல்ல நாள் என்பதால், நான் வந்துள்ளேன் என விளக்கமளித்துள்ள முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சசிகலாவை பற்றியும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். ’’சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகம் மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசிவருகிறார். ஓ.பி.எஸ் பங்குபெறாததற்கு காரணம், அவர் சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் அவரால் ஆலோசனையில் பங்கேற்க முடியவில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் கூடுதல் கவனத்தை அரசு செலுத்தவேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளதால் பரிசோதனை மையத்தையும், முகாம்களையும் அதிகரிக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் 24 மணிநேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைப்பதைவிட , மத்திய அரசு என்று அழைப்பதே சரியானது’’என அவர் தெரிவித்தார்.