மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணையத்தில் வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்ததா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணையத்தில் வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் நுகர்வோர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று அதை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவில் 2003 ஆம் ஆண்டு கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகர் மையம் தொடங்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் வெளிப்படையான ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வந்தன. இந்த மையங்களில் புகார் தெரிவிக்க விரும்பும் மின் பயனீட்டாளர்கள் 1912 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர, மின்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி விதிகளுக்கு முராணான வகையில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்படையாக செயல்பட்ட மின் தடை புகார் மையங்கள் ரத்து செய்து, அனைத்து புகார்களையும் ஒருங்கே பெறும் வண்ணம் மின்னகம் என்ற ஒரு தனித்தளத்தை அமைத்து, மின்னக எண் 94987 94987 மூலமாக பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் ஒரு முறைப் பணிக்கு 65 நபர்கள் வீதம் மூன்று முறைப் பணிகளுக்கு 195 பேர் பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கு மூன்று பேர் வீதம் 44 மின் பகிர்மான வட்டங்களில் 132 பேர் பணியாற்றி வருவதாகவும், இதற்காக ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.12 கோடி செலவிடப்படுவதாகவும், இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், மின்னகப் பணியின் ஒப்பந்ததாரர் விவரம் குறித்தும் இணையதளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் காரணமாக ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் வேலை இழந்துள்ளதாகவும், இந்த புகார்களை மட்டுமே கவனிக்கும் நிலைக்கு அதிகரிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் , இதனால் பராமரிப்பு பணிகள் மற்றும் இதர சேவைகள் தாமதப்பட்டு பொதுமக்களுக்கு மின்சார வாரியத்தின் மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த உதவி செயற் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் எல்லாம் மின்னகப் பணி என்ற போர்வையில் முறைப் பணியாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே செயல்பட்டு வந்த 1912 என்கிற மின்தடை புகார் எண்ணில் தமிழ்நாட்டில் உள்ள 44 மின்தடை புகார் மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 12,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில், அதனை முற்றிலும் மறைத்து, தற்போது பொறுப்பெற்றுள்ள அரசுதான் மின்தடை புகார் மையங்கள் மின்னகம் வாயிலாக உருவாக்கப்பட்டது போலவும், இதன் காரணமாக நாளொன்றுக்கு 8,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுவது போலவும் சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும், மின்னகம் என்ற போர்வையில் மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோரது தரவுகள் அனைத்தும் ஊர், பெயர் தெரியாத திமுகவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த 1912 என்ற புகார் எண்ணை மின்னகம் என்ற போர்வையில் 94987 94987 என மாற்றுவதற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன. முதலமைச்சர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்து விபரங்களை வெளிப்படையாக மின் பகிர்மான கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஏற்கெனவே பணிபுரிந்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்கவும், மின்னகம் தொடர்பாக மின்சார ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே நிலவும் அதிருப்தியைக் களையவும், மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்களின் தரவுகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.