ops going to delhi to meet najeem zaidi
சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது எனவும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நாளை நண்பகல் ஒ.பி.எஸ், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க உள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றனர். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அவருக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில் சில முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள், என பல்வேறு தரப்பினரும் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர், ஒ.பி.எஸ் தரப்பினருக்கும், சசிகலா தரப்பினருக்கும் இடையே எம்.எல்.ஏக்களை இழுப்பதில் போட்டி நிலவியது. அதில் பெரும்பான்மையை நிரூபித்து எடப்பாடி தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது சசிகலா தரப்பு.
இதனிடையே, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஒ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கு சசிகலா பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி ஒ.பி.எஸ் தரப்பை பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து இன்று ஒ.பி.எஸ் அணியினர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் 61 பக்கம் கொண்ட பதில் மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நாளை நண்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை ஒ.பி.எஸ் சந்திக்க உள்ளார். இதற்காக நாளை காலை பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அப்போது, சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பது குறித்தும், எனவே இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேச உள்ளதாக தெரிகிறது.
