யாருக்கும் ஏற்படாத ஒரு நிலை முதல்வர் ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் தனது நிலைபாடு குறித்து முடிவெடுப்பதில் குழப்பமான மனநிலையில் ஓபிஎஸ் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசியலில் யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட கூடாது என்று மற்றவர் நினைக்கும் அளவுக்கு முதல்வர் ஓபிஎஸ் நிலை உள்ளது. உடனிருக்கும் சக அமைச்சர்களே தன்னுடைய இடத்திற்கு சசிகலாவை வரவேண்டும் என கேட்டு பேட்டி அளிப்பதை பார்த்து அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ன செய்வது என்று தன்னை வெளிக்காட்ட முடியாத ஒரு துறவு மனப்பான்மையில் ஓபிஎஸ் இருக்கிறார்.

கட்சிக்குள் எதிர்ப்பு வலுப்பதால் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா? என ஓ.பன்னீர்செல்வம் குழப்பத்தில் உள்ளார். பதவி விலகி சசிகலாவுக்கு வழி விட்டால் தனது நிலை என்னவாகும் என்று தெரியாமல் அவர் தவிக்கிறார். ஜெயலலிதா அமைச்சரவைப் போல் இரண்டாம் இடம் கிடைக்குமா என்ற எண்ணமும் அவருக்கு உள்ளது. 

இரண்டாம் இடம் கிடைத்தாலும் அதிலும் எந்த பிரயோஜனமும் இருக்காது என்ற கவலையில் ஓபிஎஸ் உள்ளார். இரண்டாம் இடம் சசிகலாவுக்கு நெருக்கமாக எடப்பாடிக்கு வழங்கப்பட்டால் தனது நிலை என்னவாகும் என்ற கவலையும் ஓபிஎஸ்சுக்கு எழுந்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் சசிகலா முதல்வராக வரவேண்டும் என்று தானும் கோரிக்கை வைக்கலாமா? அல்லது ராஜினாமா செய்யலாமா? அல்லது சும்மா இருக்கலாமா? என திரிசங்கு நிலையில் ஓபிஎஸ் இருக்கிறாராம். 

எது செய்தாலும் அது தன் எதிர்கால வாழ்க்கைக்கு உலை வைத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் அவரை வாட்டுகிறது. எடப்பாடி , செங்கோட்டையன் , வேலுமணி என கொங்கு மண்டலமே சின்னம்மா பக்கம் நெருங்கி நிற்கிறது. நாம எந்த இடத்தில் இருப்போம் அரசியல் வாழ்க்கை என்னவாகும் என்றெல்லாம் கவலையில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.