தலைமை செயலாளர், டி.ஜி.பி.யுடன் ஓ.பி.எஸ் ஆலோசனை – சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்க திட்டம்
கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பதவி பிராமாணம் செய்யும் நிகழ்ச்சி, கவர்னர் வராததால், ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஒ.பன்னீர்செல்வம், திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்து எழுந்த அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது பரபரப்பு புகார் கூறினார்.
இதையடுத்து, சசிகலா மீது அதிருப்தி தெரிவித்து இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் நேற்று மாலை வரை, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை, கல்பாக்கம் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளியே வராமல் தடுக்க 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்றனர். அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.