அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை குழப்பத்தால் தொண்டர்கள் நொந்து நூலாகிவிட்டதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி வேதனை தெரிவித்துள்ளார். 

ஒற்றை தலைமை குழப்பம் 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டு அதிமுக -அமமுக என இருந்து வருகிறது. இதன் காரணமாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை குழப்பத்தால் ஓபிஸ் அணி- இபிஎஸ் அணி இரண்டாக பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இரண்டு தரப்பும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இபிஎஸ் தரப்போ எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அம்மாள் எப்படி ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தாரோ அது போல ஓபிஎஸ் இபிஎஸ் இடம் கட்சியை கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் இதனை ஓபிஎஸ் தரப்பு மறுத்து வருகிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்க்குள் இதற்க்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது.


அரசியலில் இருந்து விலகுகிறேன்

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆறு குட்டி, எம்ஜிஆர் காலத்தில் சாதாரண தொண்டனாக இருந்து வேப்பமரத்தில் கொடியேற்றி சிரமப்பட்டு இந்த இயக்கத்தை நடத்தி வளர்த்தோம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கேட்டுதான் செய்தார்கள், தேர்தல்களில் திமுக வியூகம் அமைத்து அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் சண்டை போட்டு வருகிறார்கள், நல்ல முறையில் இயக்கத்தைக் கொண்டு வர வேண்டும், தற்போது நடைபெற்றுவரும் பிரச்சினையால் அதிமுகவினர் சங்கடப்பட்டு வருகிறார்கள். எனவே ஓபிஎஸ்-இபிஎஸ் ஒதுங்கிக் கொள்ள வேண்டும், அந்த பதவிக்கு நிறைய பேர் அதிமுகவில் உள்ளனர். தொண்டர்களும் இந்த சம்பவத்தில் நொந்து நூலாகிவிட்டதாக தெரிவித்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்தவர், இனி அரசியல் செயல்பாடுகளில் ஆறுக்குட்டியை பார்க்க முடியாது என கூறினார். அரசியலில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.