OPS and EPS plans Smart card for find sleeper cells in ADMK party

அ.தி.மு.க.வினுள் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி நிலை ஓடிக்கொண்டிருக்கிறது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தினகரன் அணியை நோக்கி ம்! என்றால் கட்சியிலிருந்து நீக்கம், ஹும்! என்றால் பதவி பறிப்பு என்று அடக்கி, ஒடுக்கி அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறது ரெட்டைக்குழல் துப்பாக்கி என்கிறார்கள். இந்நிலையில், தங்கள் வசமுள்ள அ.தி.மு.க.வினிலிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் யார், தங்களுக்கு விசுவாசமான நபர்கள் யார்? என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள கட்சிக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எப்படி?...

அக்கட்சியின் விதிகளின் படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடைசி தேர்தல் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆகவே தேர்தலை நடத்தியாக வேண்டும். இந்த தேர்தலை பயன்படுத்தி தினகரன் ஆதரவாளர்களை கட்சியிலிருந்தே நீக்கி, தூக்கி வீசியெறியும் முடிவுக்கு வந்துவிட்டனர் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும். 

அதன் விளைவாகத்தான் கட்சியின் அத்தனை உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பிளானை போட்டிருக்கிறார்களாம். 

இதுவரையில் இல்லாத வகையில் இந்த முறை உறுப்பினர் படிவத்தில் பிறந்த தேதி, மொபைல் எண், கல்வித் தகுதி ஆகியவற்றை கேட்டுள்ளார்களாம். இவ்வளவு நுணுக்கமாக தகவல்கள் கேட்பதற்கு காரணமே உறுப்பினர் அட்டையை ஸ்மார்ட் கார்டாக தருவதற்காகத்தான் என்று பேச்சு கேட்கிறது ராயப்பேட்டை அலுவலகத்தில் இருந்து. ஒவ்வொரு நபர் பற்றி முழு விபரங்களும் கலெக்ட் செய்யப்பட இருக்கிறதாம். 

இந்த ஸ்மார்ட் கார்டில் பார் கோடுகள் இருக்குமாம். இந்த பார்கோடை ஸ்கேன் செய்தாலே கம்ப்யூட்டர் திரையில் அந்த நபரின் ஜாதகங்கள் தெரிந்துவிடுமாம். அதை வைத்து அந்த நபரின் ஜாதகம் தங்களுக்கு சாதகமா? பாதகமா! என்பதை முடிவு செய்துவிட்டு சீட்டு வழங்குவதில் ஆரம்பித்து கட்டம் கட்டுவது வரை அத்தனை முடிவுகளையும் எடுக்கலாமாம். 

தினகரன் அணியை ஆகாத நிர்வாகிகள் இந்த ஸ்மார்ட் கார்டு பிளானை என்னமோ ஸ்காட்லாந்து போலிஸின் ஹைடைக் ஆபரேஷன் ரேஞ்சுக்கு நினைத்து, ‘இனி டி.டி.வி. கோஷ்டி எங்களுக்குள் ஊடுருவவோ, குழப்பம் செய்யவோ முடியாது. தினகரன் கோஷ்டிக்கு இது பெரிய டிராஜடிதான்.’ என்கிறார்கள். 

ஆனால் டி.டி.வி. தரப்போ ‘ஸ்மார்ட் கார்டு, ரேஷன்கார்டு, பான்கார்டுன்னு என்ன வேணா கொடுங்க. ஆனா யாரு உங்க பக்கம் நிற்கப்போறாங்க? ஒரே தீர்ப்புல அத்தனை தலைகீழா மாறிப்போகப்போகுது. இன்னைக்கு ஸ்மார்ட் கார்டு போடுற உங்க ஆட்சிக்கு நாங்க போடுவோம்யா எண்டு கார்டு.’ என்று கொக்கரிக்கின்றனர். 

அ.தி.மு.க.வின் ஸ்மார்ட் கார்டு பிளான் காமெடியா? அல்லது டிராஜடியா? என்பதை கவனிப்போம்.