ஆளுநர் விருந்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ்-இபிஎஸ்..! சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதிலுரையை புறக்கணிப்பு.?
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை அளி்கவுள்ளநிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் புறக்கணித்துள்ளனர்.
ஆளுநருக்கு எதிராக அரசியல் கட்சிகள்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. முதல் நாள் கூட்டமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தான் சட்டப்பேரவையை புறக்கணித்து வந்த நிலையில், உரை நிகழ்த்த வந்த ஆளுநரே பாதியில் இருந்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய கீதத்தையும், தமிழக சட்டமன்றத்தையும் ஆளுநர் புறக்கணித்த நிகழ்விற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து ஆளுநர் மாளிகை சார்பாக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையும், தமிழக அரசு முத்திரைக்கு பதிலாக இந்திய அரசு முத்திரையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆளும் கட்சியான திமுக ஆளுநரின் பொங்கல் விழாவை புறக்கணித்தன. இதே போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளும் தங்களது எதிர்ப்புகளை காட்டும் வகையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆளுநரோடு அருகருகே அமர்ந்து தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பதிலுரை புறக்கணிப்பு
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார். ஆனால் முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணிக்கும் வகையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் புறக்கணித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்