இரு அணிகளும் இணைப்புக்கு தயார் - நாளை மறுநாள் பேச்சுவார்த்தை
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, குறிப்பாக சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. சிலர், சசிகலாவிற்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சட்டமன்ற ஆட்சிக்குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்ட பின்பு, சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றார். இதனையடுத்து அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டது.
இதற்கிடையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தினகரனும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, நேற்று அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசணை நடத்தினார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் செங்கோட்டையன், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், ஓ.பி.எஸ். அணி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த, முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தலைமையில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இரு அணி தரப்பிலும் நாளை மறுநாள் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது? யார் கட்சியை வழி நடத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.