ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கும் எதிர்கட்சியினர்...! அரசுக்கு நெருக்கடி!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, எதிர்கட்சியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்யித யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியினர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22 ஆம் தேதி கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர்.
ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார்.
பாதுகாப்பு இல்லை என்று கருதி, மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, எதிர்கட்சியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்தியயூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்திக்க, ராஜ்பவன் சென்றுள்ளனர்.
எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், எம்பி. கனிமொழி, திமுக கொறடா சக்ரபாணி, ஆர்.எஸ். பாரதி, காங்கிரஸ் கொறடா விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அபுபக்கர் உள்ளிட்ட பலர் சென்னை ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், எதிர்கட்சியினர் இன்று ஆளுநரைச் சந்திக்க, ராஜ்பவன் சென்றுள்ளனர்.