தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி பாதிப்பு 10,000 தாண்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 6000 கடந்துள்ளது. இதனிடையே, பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
