ஓ.பன்னீர்செல்வம் எப்படி கே.பன்னீர்செல்வம் ஆனது? பேனர் வைத்தவர்களிடம் விளக்கம் கேட்ட ஓபிஎஸ் தரப்பு!
காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு வைக்கப்பட்ட பேனரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இனிஷியல் மாறியுள்ளது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், பேனர் வைத்தவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் அம்மாவின் விசுவாசமிக்க மாணவன் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க மாணவன் பென்ஸ் சரவணன் ஆகியோர் பேனர் ஒன்று வைத்துள்ளனர். அந்த பேனரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இனிஷியல் மாறியுள்ளது. அதாவது, ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக கே.பன்னீர்செல்வம் என்று போடப்பட்டுள்ளது.
இனிஷியல் மாறிய தகவல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்ட்டவர்களிடம் போனில் விசாரரிக்கப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசிய ஒருவர், திட்டமிட்டு இதைச் செய்தீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். பிரிண்டிங்கில் தவறு நடந்து விட்டது என்றும் இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் பேனர் வைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.