O.panneerselvam team trolled By Nanjil Sambath

நாஞ்சில் சம்பத் நல்ல இலக்கிய பேச்சாளர். அவர் பேச்சில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எதிரொலிக்கும். புராண, இதிகாச பேச்சில் கூட புதுமையான அணுகுமுறை இருக்கும் என்ற காலம் எல்லாம் மாறி போய்விட்டது.

தற்போது அவரிடம் இருந்து வெளிப்படுவதெல்லாம், தனி நபர் விமர்சனங்களும், தரமில்லாத நரகல் நடையுமாகவே இருக்கிறது. இந்த அளவுக்கு அவர் எதற்காக இறங்கி வந்தார்? என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது.

மதிமுகவில் இருந்த போது, அவர் ஒரு கொள்கை வீரனாகவே வலம் வந்தார். பல பாதிப்புகளுக்கும் கூட ஆளானார். அப்போது கூட அவரது பேச்சில் ஒரு நயம் இருந்தது.

அதன் பிறகு அதிமுகவில் சேர்ந்தாலும், ஜெயலலிதா இருந்த வரையில் அவரது பேச்சு ரசிக்கும்படியாகவே இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவை விமர்சித்து அவர் உதிர்த்த வார்த்தைகளில் கூட ஒரு இலக்கிய நயம் இழையோடியது.

ஆனால், அவர் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிய பின்னர் உதிர்க்கும் வார்த்தைகள்தான், நடுநிலையாளர்களை மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது.

நாஞ்சில் சம்பத், அரசியல் சார்ந்து இருந்தாலும், அவரது இலக்கிய, இதிகாச பேச்சுக்களை விரும்பி கேட்பதற்கென்று ஒரு கூட்டம் இன்றும் இருக்கிறது. அந்த கூட்டம்தான் அவர் இவ்வாறு பேசுவதை எண்ணி கவலை கொள்கிறது.

அதற்கு உதாரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களுக்கு எதிராக நாஞ்சில் சம்பத் முன் வைத்த கருத்துக்களை பார்ப்போம். 

"பூசாரியவே கொன்னவன் தான் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா".

"எமனுக்கே தூக்கிட்டு போக மனசு இல்லாம சுத்திகிட்டு திரியிரவன் தான் மதுசூதனன்".

"அப்பன் யாரு புள்ளை யாருன்னு தெரியாம இரண்டு மண்டையங்கள் இருப்பாய்ங்க அவிங்க தான் பி.எச்.பாண்டியன் , மனோஜ் பாண்டியன்". 

"எருமை மாட்டின் பின் பகுதி தான் இந்த கே.பி.முனுசாமி".

"முஸ்லீம் லீக் கட்சிக்கு போனா சுன்னத் பண்ணனும்னு சொன்னதுனாலாதான் மாஃபா பாண்டியராஜன் அங்க போகல."

இதுதான் நாஞ்சில் சம்பத்தின் தற்போதய பேச்சு மொழி.

நயவுரை நம்பியாக இருந்த நாஞ்சில் சம்பத், இப்படி நரகல் நடை நாயகனாக மாறியதற்கு காரணம் என்ன?

எல்லாம் அரசியல்தான் என்றால், இதற்கு முன்னரும் அவர் அரசியலிதானே இருந்தார். இப்போது மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டார்? என்று கேள்வி எழுப்புகிறது இலக்கிய உலகம்.