ஒ.பி.எஸ் வராவிட்டாலும் பரவாயில்லை - எடப்பாடி காரசார பேச்சு...
முதலில் எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய ஒ.பி.எஸ் அணி தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், ஒ.பி.எஸ் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி அணி மற்றும் ஒ.பி.எஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.
இரு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தள்ளி கொண்டே போகிறது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து எடப்பாடி அணியில் குழுவும் அமைக்கப்பட்டது.
அதைதொடர்ந்து ஒ.பி.எஸ் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடந்தபாடில்லை.
காரணம், ஒ.பி.எஸ் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து முழுமையாக அதிர்கார பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து டிடிவி தினகரன் கட்சியில் இருந்து விலகினார். பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை அமைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பில் தெரிவித்தனர்.
பின்னர், தற்போது யார் முதல்வர் என்ற போட்டி நிலவுவதாக தெரிகிறது. எடப்பாடி அணி தரப்பில் தொடர்ந்து அமைச்சர்கள் எடப்பாடியே முதலமைச்சர் என போகும் இடத்திலெல்லாம் பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கலில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, முதலில் எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய ஒ.பி.எஸ் அணி தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக தெரிவித்தார்.
மேலும் 90 சதவீத நிர்வாகிகள் நம் பக்கம் தான் உள்ளனர் எனவும் ஒ.பி.எஸ் பேச்சுவாத்தைக்கு வராவிட்டாலும் பரவாயில்லை எனவும் தெரிவித்தார்.