ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டை தடை செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியை ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலைகள்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் மூலம் தமிழகத்தில் சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் தங்களது பணத்தை இழந்து நடு ரோட்டில் தவித்து வருகின்றனர். இதில் பணத்தை இழந்த விரக்தியில் 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காலம் தாழ்த்தும் ஆளுநர்
இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலை நீடித்து வருகிறது. இதனையடுத்து திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மசோதாவிற்கு ஒப்புதல் தர வலியுறுத்தி அமைச்சர் ரகுபதி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தினர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் கடந்த 5ம் தேதி சந்தித்து பேசியது திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
ஆன்லைன் விளையாட்டு - ஆளுநர் ஆலோசனை
ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் கேம் 24x7 உரிமையாளர் விக்ரமன், இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சமீர், ஹெட் டிஜிட்டல் ஒர்க் தீபக் கோலபள்ளி, குலோப் நிறுவன இயக்குநர் நேகா சிங்வி, இஜிஎப் நிறுவன இயக்குநர் ரோகன் சரீன், ஜங்கிலி கேம்ஸ் நிறுவன நிர்வாகி சஞ்சீவ் ஜெடி ஆகிய நிறுவன நிர்வாகிகள் கவர்னரை சந்தித்துள்ளனர். கவர்னர் உடனான இந்த சந்திப்பில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆன்லைன் விளையாட்டால் பொதுமக்கள் பணம் இழப்பு ஏற்படுவது குறித்தும் ஆளுநர் அந்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா காலாவதியாகியுள்ள நிலையில், தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகளை ஆளுநர் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.