10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இது தான் சிறந்தது.. பாமகவின் நிலைக்கு வலு சேர்த்த கோர்ட்.. வரவேற்கும் Anbumani
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை விட ஆன்லைன் வகுப்பே சிறந்தது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து நெல்லையை சேர்ந்த அப்துல் என்பவர் தமிழகத்தில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து , ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது. மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது, அதன் மூலம் தான் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது.
அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் பாமகவின் நிலைக்கு வலு சேர்த்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நேரடி வகுப்புகள் அவற்றைப் போக்கும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், இதனால் ஏற்படும் நன்மையை விட மோசமான தீமையை கொரோனா ஏற்படுத்தி விடும் என்பதே எங்கள் அச்சம்.
அதனால், மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.