வீடியோவை வெளியில் விட்டதில்... குடும்ப டிவி.,யே ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்துவிட்டதே...!
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், இன்று காலை பத்திரிகையாளர்களிடம் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஜெயலலிதா படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்றபடி, ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோதான் என்று கூறினார்.
இது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. வீடியோவை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வீடியோ வெளியீடு, சசிகலா குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி விட்டது. சசிகலா இந்த வீடியோ வெளியீட்டை ஏற்றுக் கொள்வார் என்று தினகரன் ஆதரவு தரப்பு கூற, நிச்சயமாக இதனை சசிகலா ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா ஆகியோர் தரப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே, சசிகலா அண்மையில் 5 நாள் பரோலில் சென்னைக்கு வந்திருந்தபோது, கடைசி இரு நாட்களில் குடும்ப மோதல் உச்ச கட்டத்தில் இருந்தது. விவேக் ஜெயராமன் ஒரு தரப்பிலும், ஜெயானந்த் ஒரு தரப்புமாக நின்றனர். தினகரன் விவகாரத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த் ஒன்று கூற, கிருஷ்ணப்ரியா, விவேக் தரப்பு ஒன்று கூற என்று... மோதல் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்த மோதல் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா குற்றம் சாட்டிய நிலையில், சசிகலா அண்ணன் மகன் ஜெயானந்த் வெற்றிவேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோ வெளியிடப்பட்டதை சசிகலா ஏற்றுக் கொள்வார் என்று கூறிய திவாகரன் மகன் ஜெயானந்த், இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தொண்டர்கள் நிம்மதிக்காகவே ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோ வெளியிடப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வார்டுக்கு மற்றப்பட்ட பின் ஏடுக்கப்பட வீடியோ இது.
இதன் நம்பகத் தன்மை குறித்து சர்வதேச அளவில் கூட ஆய்வு செய்யலாம். ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை. இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலின் நோக்கத்தை யாரும் குறை சொல்ல முடியாது. அதை சசிகலா அறிந்து கொள்வார்... என்று கூறினார்.
ஆனால், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை இந்த நேரத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? கொலைப்பழி வந்தபோது கூட சசிகலா வீடியோவை வெளியிடவில்லை. வெற்றிவேல் மீது டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... என்று பொருமித் தள்ளினார் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா.
நாளை தேர்தலை வைத்துக்கொண்டு, சுயநலத்திற்காக ஜெயலலிதா வீடியோவை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறி, கிருஷ்ணப்ரியா இந்தக் குடும்ப மோதலைத் துவக்கி வைத்தார்.
இப்படி, ஒரு வீடியோ வெளியானதன் விளைவு, நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று தினகரன் தரப்பு செய்திகளை குடும்ப டிவியான ஜெயா டிவி புறக்கணித்துள்ளது. தற்போதும் அது விவேக் ஜெயராமன், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.