தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு..? ஓபன் தி டாஸ்மாக்... எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..?
டாஸ்மாக் கடைகளை திறந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க உயரதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் நடைபயிற்சி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிக்கவும் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்கவும் உயரதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட முதல் 15 நாட்களில் மட்டும் அரசுக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மற்ற கடைகளை போல டாஸ்மாக் கடைகளை முன்பு இருந்ததை போல, குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டும் திறக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், டாஸ்மாக் கடைகளை திறந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தளர்வு அளிக்கப்படாத 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும். தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பு குறித்தும், கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.