அடுத்தடுத்து உயிர்பலி வாங்கும் நீட்….மதுரைக்கு மகளை அழைத்து வந்த தந்தை மாரடைப்பால் மரணம்….
நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகனை கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி என்பவர் அங்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரை அழைத்து வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் என்பரும் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருத்துறைப்பூண்டி சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவா் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத கேரள மாநிலம், எர்ணாகுளம் அழைத்து சென்ற போது மாரடைப்பு காரணமாக காலையில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டிச் செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகள் தேவி ஐஸ்வர்யாவிடம் நெஞ்சுவலிப்பதாக கண்ணன் கூறியுள்ளார். பின்னர் கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார். உயிரிழந்த கண்ணன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரியை சேர்ந்தவா். கண்ணனின் மரணம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வே வேண்டாம் என தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் பிடிவாதத்தால் இன்று நடைபெற்ற நீட் தேர்வு அடுத்தடுத்து 2 உயிர்களை பலி வாங்கியுள்ளது..