On the 12th day Tamil Nadu should be seen as black day - M.K. Stalin

அனைவரும் பச்சைத்துண்டு போட்டிருப்பதால் தமிழ்நாடே பச்சை நிறமாக காட்சியளிப்பதுபோல், வரும் 12 ஆம் தேதி அன்று தமிழ்நாடே கருப்பு தினமாக
காட்சியளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்துக்கு துரோகமிழைப்பதில் மோடிக்கேற்ற எடப்பாடி என்ற புதுமொழி உருவாகியிருப்பதாக
ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். திருச்சி
முக்கொம்பில் தொடங்கிய இந்த பேரணி கடலூரில் முடிவடைகிறது. இன்று தஞ்சை மாவட்டம், புத்தூர் பகுதியில் வந்த மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு
பயணத்தினால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்றால் என்ன என்று அகராதியை எடுத்துப் பார்த்தாலே தெரியும். ஆனால், மத்திய அரசு தூங்குவதுபோல
நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எழுப்ப முடியாது. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிபணிந்து எடுபிடி வேலை செய்பவராக தமிழ்நாட்டின்
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

ஜாடிக்கேற்ற மூடி என்று ஒரு முதுமொழி ஒன்று உண்டு. இப்போது மோடிக்கேற்ற எடப்பாடி என்ற புதுமொழி உருவாகியிருப்பதாக கூறினார். மத்திய அரசும்
மாநில அரசும் காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல், நீங்கள் அனைவரும் பங்கேற்று இருப்பதைக் கண்டு பெருமையடைகிறேன்.

வருகிற 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிற நேரத்தில் அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தினை நடத்துவதென எதிர்கட்சிகள் ஒன்று
சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறோம். தமிழ்நாடு ஒரு துக்கநாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு, அதை வெளிப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாட்டுக்கு
வரும்போது நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றார். அனைவரும் கருப்புச்சட்டை, கருப்பு புடவை அணிந்து நம்முடைய உணர்வை
வெளிப்படுத்த வேண்டும். ஒருவேளை கருப்பு உடை இல்லாதவர்கள், கருப்பு ரிப்பன் குத்திக் கொண்டு நமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு அனைவரும் பச்சைத் துண்டுகளைப் போட்டிருப்பதால், தமிழ்நாடே பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. அதுபோலவே 12 ஆம் தேதி அன்று தமிழ்நாடே
கருப்பு தினமாக காட்சியளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.