On October 4 Jayalalithaa has a heart attack
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முதல் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டதாக அப்போலோ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் குறித்து டாக்டர் அர்ச்சனா, ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், அவர் காலமானார்.
அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜெ. மரணம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா தொடர்பானவர்களிடம் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ நிர்வாகத்துக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
அப்போலோ மருத்துவமனை, ஆறுமுகாசமி ஆணையத்திடம் ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை குறித்த ஆவணங்களை ஒப்படைத்தது. அதன்பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அர்ச்சனாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து டாக்டர் அர்ச்சனா, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது அவரிடம், அப்போலோ நிர்வாகம் அளித்த ஆவணத்தின்படி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஜெ.வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது குறித்து ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆனால், டாக்டர் அர்ச்சனா எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
