On February 11 people including OBS should answer
ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கில் பிப்.5-ம் தேதிக்குள் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் பதில்தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இரண்டு அணியாக பிரிந்ததையடுத்து முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார்.
ஆனால் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை எனகூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரிந்து சென்ற ஒபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒபிஎஸ் தலைமையிலான 11 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதைதொடர்ந்து பெரும்பான்மையின் காரணமாக எடப்பாடி முதலமைச்சராக நீடித்தார். ஆனாலும் தற்போது எடப்பாடிக்கு எதிராக திரும்பிய டிடிவி அணியில் இருந்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை செய்த சபாநாயகர் ஒபிஎஸ் எதிர்த்தபோது ஏன் செய்யவில்லை எனவும் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.
அப்போது, எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என வாதாடினார்.
மேலும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். அந்த உத்தரவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாமே தவிர, தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் அப்போது 11 எம்.எல்.ஏக்களை தகுதி செய்ய மறுத்துவிட்டார் என திமுக வழக்கறிஞர் வாதாடினார்.
இந்நிலையில், பிப்.5-ம் தேதிக்குள் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் பதில்தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை பிப்.13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதில்மனு தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கோரியதால் வழக்கை பிப்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
