திரைத்துறை சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.. இப்பவே துண்டைப் போட்ட முதல் சங்கம்..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட சங்கங்கள் இணைந்து பாராட்டு விழா நடத்த உள்ளோம் என்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்ரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்ற பிறகு திரைத்துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டுள்ளார். இதேபோல அனைத்து சங்கமும் இணைந்து திமுக தலைவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம்.
தமிழக திரைத்துறைக்கு பல சலுகைகளை திமுக வழங்கியுள்ளது. சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் இருந்தபோது எந்தளவுக்கு பணியாற்றினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுபோல தமிழகத்தையும் சிறப்பாக வழி நடத்துவார். கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் ஓராண்டாக மூடிகிடக்கின்றன. எனவே, சொத்து வரி, தொழில்வரி, மின்சார கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 8 சதவீத எல்.பி.டி. வரியையும் தள்ளுபடி செய்யவேண்டும். இதன்மூலம் டிக்கெட் விலையும் குறையும்.
உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையைச் சேர்ந்தவர். சிரமங்கள் அனைத்தையும் அறிந்தவர். திமுக ஆட்சியில் எங்களுக்கு விடிவு காலம் வரும் என்று நாங்கள் நம்புகிறோம். கருணாநிதி திரைத்துறையினரிடம் மென்மையாக நடந்துகொள்வார். அதையே திமுக தலைவர் ஸ்டாலினும் பின்பற்றுவார் என நம்புகிறோம்” என்று சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.