அட கடவுளே.. தமிழகத்தில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா.. பதறும் சுகாதாரத்துறை.
அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் கோவையில் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 யை தாண்டி இருக்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. 20 மாவட்டங்களில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த வாரம் வரை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஒரு வார காலமாகவே தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சில மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னை மற்றும் கோவையில் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 யை தாண்டி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 181 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதன் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 188 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 230 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று முன்தினம் ஈரோட்டில் 166 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 171 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் நேற்று முன்தினம் 1859 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 1947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் படிப்படியாக கொரொனா தொற்று உயர்ந்து வருவது மக்களை பீதியடைய செய்துள்ளது. மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலையில், தமிழக அரசு துரிதகதியில் செயல்பட்டு வந்தாலும், போதிய அளவில் ஊசிகள் கிடைப்பதில் தொடர்ந்து தொய்வு நிலவி வருகிறது.
மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் பலனில்லை. அதே நேரத்தில் தளர்வுகளுடனான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக முகக் கவசம், சமூக இடைவெளியின்றி சுற்றித் திரிகின்றனர். இதனால் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.