வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்  நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கின்றன. பிற கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்யும் பணியைத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “அந்தி வந்தால் நிலவு. இந்தி வந்தால் பிளவு. இந்திதான் இந்தியா என்ற கட்டமைப்புக்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியைப் படிக்கச் சொல்வதைப்போல தமிழையும் நாடு முழுவதும் படிக்க சொல்வார்களா? வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று சீமான் தெரிவித்தார்.